சென்னை : ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையையொட்டி ஆளுநர் மற்றும் பல்வேறு தலைவர்கள் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் : ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நாளில், தமிழக மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தீய சக்திகளை நன்மை சக்திகள் வென்றதை குறிக்கும் வகையில் ஆயுத பூஜை தமிழகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா நமது மாநிலம், தேசத்தில் அமைதி, நல்லிணக்கம், மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி: சிறப்புமிக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை கொண்டாடும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும், எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று, சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்: செய்யும் தொழிலே தெய்வமென்று, தெய்வத்தையும், தெய்வமாக தொழிலையும் போற்றும் அத்தனை பேரும் அவர்கள் செய்யும் பணியிலும்,தொழிலிலும் இந்த விஜயதசமி மிகப்பெரிய வெற்றியை தரட்டும். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்: தமிழக மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த ஆயுத பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: எதிர்மறை சிந்தனைகளை அகற்றி, புதிய சாதனைகள் புரிவதற்கான பணிகளை வெற்றித்திருநாளான விஜயதசமியில் தொடங்கிடுவோம். தமாகா தலைவர் ஜி.ேக.வாசன் : இனி வருங்காலங்களில் மாணவர்கள் கல்வியிலும், தொழிலாளர்களும், தொழில்துறையினரும் தங்கள் தொழில்களில் சிறந்து விளங்கி சாதனை படைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்: ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி, படிப்பிற்கும், தொழிலுக்கும், செல்வத்திற்கும் உரிய தெய்வங்களை வணங்கி எல்லா வளமும், நலமும் பெற்று சிறப்புடன் மக்கள் அனைவரும் வளமாக வாழ நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதைப்போன்று புதிய நீதிக் கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், சமத்துவ மக்கள் கழக தலைவர் நாராயணன், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.